வலைப்பூ
அடுத்த ஒருவாரத்திற்கு வலைப்பூ பத்திரிக்கையின் ஆசிரியராக நான் பணியாற்றப் போகிறேன். அதற்காக எழுதிய சில பதிவுகள், என் பதிவிலும் நான் இடுகிறேன். வலைப்பூவிற்காக என்னைப் பற்றி நான் எழுதியது.
Disclaimer : இது கொஞ்சம் சுயதம்பட்டம். சுயதம்பட்டத்தை வெறுப்பவர்கள், இதை தவிர்த்துவிடலாம்.
இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஸ்டைல்ல சொல்லனும் என்றால், சென்ற ஜூன் மாதம், சூரியனைச் சுற்றி இருபத்திமூன்று தடவை பயணம் செய்துவிட்டு, இருபத்திநான்காவது சவாரியை மேற்கொண்டுள்ளேன்.
சேலம் அருகே உள்ள பவானி என்னும் ஊரில் பிறந்தேன். சிதம்பரத்திலும், கடலூரிலும் பள்ளி படிப்பு. தஞ்சாவூரில் பொறியியல் இளங்கலைப் படிப்பு. கடந்த இரண்டு வருடமாக சென்னையில் போலீஸ்காரர்களுக்கு போட்டியாக தொப்பை வளர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன் .
நான் ஒரு நல்ல சினிமா பைத்தியம். நல்ல திரைப்படங்கள், விரும்பிப்பார்ப்பேன், நண்பர்களிடம் அதைப்பற்றி சிலாகித்து விவாதம் செய்வேன். ஆனால் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் வகையிலான கலைப்படங்கள் எனக்கு பிடிக்காது.
என் அம்மாவினாலும், என் பள்ளியின் தமிழ் அம்மாவினால் தமிழில் மிகவும் ஆர்வம் வந்தது. பல தமிழ் செய்யுளை சூப்பராக கடம் அடித்து வைத்திருப்பேன். சுஜாதாவால் நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈர்க்கப்பட்டவன், இப்போது சுஜாதாவின் கடுமையான விமர்சகர்களால் வலைப்பூக்களில் ஈர்க்கப்பட்டு உள்ளேன். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், ஜே.ஜே சில குறிப்புகள் போன்ற படைப்புகளை இதுவரை படித்ததில்லை ஆனால் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. தமிழில், நான் படித்ததில், பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம். நகைச்சுவை எனக்கு மிகவும் பிடித்தது. கிரேஸி மோகன் இப்போது எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவையாளர். சோவின் நக்கலும் நையாண்டியும் எனக்கு பிடிக்கும். இதைத் தவிர எல்லோரையும் போல் கடவுள் பற்றி எனக்கும் கேள்வி எழுந்தது, வேத்தாத்ரி சிந்தனைக் கூடத்தில் விடை கிடைத்து ஓரளவு தெளிவு பிறந்ததனால் கொஞ்சம் ஆன்மீக நாட்டமும் உண்டு.
எப்போது ஒரு நல்ல ரசிகனாகவும், சிறந்த வாசகனாகவும் இருக்க நான் விரும்புகிறேன். நான் உருப்படியாக செய்கின்ற காரியம், என் நண்பர்களோடு இணைந்து மித்ரன் என்ற ஒரு உதவிக்குழுவிற்காக சில வேலைகளை செய்வது. நான் உருப்படியாக செய்யப்போகிற காரியம் தமிழ் மரபு கவிதைக்காக ஒரு compiler.
இந்த வாரம் வலைப்பூவில் சினிமா, பயணம் ஏனைய பிற வெட்டிப் பேச்சுக்களை உங்களிடம் பேச வந்திருக்கிறேன்.
– நன்றி : வலைப்பூ
கலங்கப் போவது யாரு…..
நம் உடலின் குண்டலினி சக்தியினை மூலாதாரத்திலிருந்து ஆக்கினைக்கு எழுப்பிவிட முடியும், காலை ஒன்பது மணிக்கு டூ-வீலரில் மத்திய கைலாஷில் இருந்து டைடல் பார்க்குக்கு பத்து நிமிடத்தில் கூட போய்விட முடியும், ஏன் நம்ம முருகன் இட்லி கடையில் போனவுடனேயே உட்கார இடம் கிடைத்தாலும் கிடைத்துவிடும், ஆனால் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பொறியியல் கவுன்ஸிலிங் மட்டும் எப்போது நடக்கும் என்று யாராலும் கூற இயலாது. இந்த வருட +2 முடித்த மாணவர்களின், இப்போதைய நிலை, அதுவும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு மாணவர்களின் நிலை படுமோசம். கவுன்சலிங் பற்றி clueless ஆக இருக்கிறார்கள்.
இதனுடைய பின்புலத் தகவல்களை ஒரு நடை பார்த்துவிடுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல்/மருத்துவக் கல்லூரிகளுக்கு TNPCEE மதிப்பெண்கள் மிக அவசியமானத் தேவை என்பது நீங்கள் எல்லோரும் அறிந்ததே. சென்ற இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் இருந்த இருநூற்றுச் சொச்ச பொறியியல் கல்லூரிகளுக்கு, TNPCEE தேர்வு ஒன்றே போதுமானதாக இருந்தது. நமது பொறியியல் கல்லூரிகளின், பரிணாம வளர்ச்சியின் காரணமாகவும், வியாபாரத்தை நன்றாக வளர்த்துக் கொள்ளவும், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களாக (deemed university) மாறத்துவங்கின. அதாவது “எங்க கடையில் பொறியியல் மட்டும் அல்ல, கலை, அறிவியல், ஜோதிடவியல் என்று சகலைத்தையும் வைத்திருக்கிறோம். எங்களுக்கு எந்த பல்கலைக்கழகததிலும் affiliation கிடையாது. ஆகையால் TNPCEE என்ற மோடி வித்தையெல்லாம் வேலைக்கு ஆகாது, ஐநூறு ரூபாய் கொடுத்து அப்ளிகேஷன் வாங்குங்க, அதுக்கப்பறம் இரண்டரையோ, மூன்றோ கொடுத்து கல்லூரியில் சேருங்க, சேருங்க, சேர்ந்துகிட்டே இருங்க” என்ற ரீதியில் வியாபாரம் சூடாகப் போய் கொண்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நம் மத்திய அரசு, AIEEE என்ற ஒரு தேர்வினைக் கொண்டுவந்து, நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் AIEEE மதிப்பெண்கள் வைத்துதான் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று போராடி, ஒரு வழியாக நடைமுறைப்படுத்தியது.
ஆனால் இந்த வருடம் நடந்த தமிழ்நாட்டில் நடந்த குளறுபடிகள் கணக்கில் அடங்கா. இதைத் தவிர BITS, Pilani குழப்பம் வேறு. BITS, Pilani என்ற கல்லூரி, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாணவர்களுக்காக ராஜஸ்தானில் பிர்லா கட்டியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கல்லூரியில் அட்மிஷன் வாங்க ஒருவர் செய்யவேண்டியது ரொம்ப சிம்பிள். ப்ளஸ் டூ தேர்வில் 1220க்கு 1160 மேல் எடுத்தால் மட்டும் போதுமானது. பிலானியில் படிக்கும் கனவோடு, தேர்வுக்காக நன்றாக தட்டி, தேர்வில் மிக நன்றாக கொட்டி வைத்திருந்தவர்களின் கனவில் இந்த வருடம் மண் விழுந்தது. ராஜஸ்தான் நீதிமன்றம், பிலானியில் AIEEE வழியாக தான் அட்மிஷன் செய்ய வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தது. இரண்டு வாரம் மாணவர்கள் திண்டாடிய பிறகு, ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு. அதன் முடிவாக, இந்த வருடம் AIEEE வேண்டாம், எப்போதும் போல அட்மிஷன் நடத்துங்கள், அடுத்த வருடம் பார்ப்போம் என்று தீர்ப்பு வந்தது.
முதலில் TNPCEE மதிப்பெண்கள் குழப்பம். சில கேள்விகள் தவறு, அதற்கு ஏற்றார் போல் விடைகளுக்கான மதிப்பெண்களை சரியாக வழங்கவில்லை என்று ஒரு வழக்கு. இந்த வழக்கு தொடுக்கும் முன்பே TNPCEE rank வெளிவந்தது. வழக்கின் தீர்ப்பின் காரணமாக மதிப்பெண்கள், மறுகணிப்பு செய்யப்பட்டது. இந்த மறுகணிப்பால், மாணவர்களின் பொறியியல் ராங்க் அதிகமாக மாறவில்லை, மருத்துவ அட்மிஷனக்காக காத்திருந்த மாணவர்களுக்கான ராங்க் தாறுமாறாக மாறியது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு இன்னும் வரவில்லை.
இரண்டாவதாக, மறுமுறை தேர்வெழுதும் மாணவர்கள் வழக்கு. எப்போதுமே, மருத்துவ அட்மிஷனில், சுமார் 50% மறுதேர்வு எழுதும் மாணாக்கர்கள் தான் சீட் கிடைக்கும். ஆனால் இந்த வருடம், மறுதேர்வு எழுதியவர்கள் மருத்துவ கவுன்சிலிங்கில் அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், இந்த வழக்கு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பிறகு தொடுக்கப்பட்டது. ஆகையால் கோர்ட், மறுதேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் அவர்களுடைய அட்மிஷனுக்கு ஒரு stay கொண்டுவந்தது. இதை எதிர்த்து, இரண்டு மறுதேர்வு எழுதிய மாணவிகள், வக்கீல்கள் யாரும் இல்லாமல், நீதிமன்றத்தில் அவர்களுடைய நிலைமையை தெளிவாக எடுத்துவைத்தனர். அவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை உணர்ந்து நீதிமன்றம் வழக்கை மறுவிசாரணை செய்து கொண்டிருக்கிறது.
இந்த மருத்துவ கவுன்சிலிங்கில் உள்ள குளறுபடியால், அது மறுமுறை கூட நடக்கலாமோ என்ற காரணத்தாலோ, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கவுன்சிலிங்கை காலவரை எதுவும் சொல்லாமல் ஒத்திவைத்தது. இன்று நாள் வரை அதன் நிலை என்னவென்று யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.
மூன்றாவது, பிரச்சினை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் management seat என்ற quota உண்டு. ஒரு பொறியியல் கல்லூரியில் 100 காலியிடம் இருந்தால், 50 காலியிடத்தை அண்ணா பல்கலைகழகம் நிரப்பும். மீதி 50 காலியிடங்களை அன்றைய சந்தை நிலவரப்படி எவ்வளவு ரேட்டோ, அதை வாங்கிக்கொண்டு கல்லூரி நிர்வாகமே காலியிடத்தை நிரப்பிக் கொள்ளும். தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்த மாணவர்கள், அல்லது கவுன்சிலிங்கில் கிடைக்கா விட்டாலும் பராவாயில்லை அந்த ஒரு கல்லூரியில் தான் படிப்பேன் என்ற கொள்கைப்பிடிப்பு உடையவர்கள், இரண்டு முதல் ஐந்து லகரம் வரை capitation fee கொடுத்து management quotaவில் சேருவார்கள். அவர்கள் கனவிலும் இந்த வருடம் மண் விழுந்தது.
Management Quota விற்கு TNPCEE நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களுக்கும் தனி கவுன்சிலிங் வைக்கவேண்டும் என்று அரசு பணித்தது. அதை எதிர்த்து சுயநிதி பொறியியல் கல்லூரி வசூல்ராஜாக்கள் வழக்கு தொடர்ந்தனர். கடைசியில் TNPCEE மதிப்பெண்களை எல்லாம் நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது, நாங்கள் தனியாக ஒரு நுழைவுத்தேர்வு நடத்தி அதன் வழியாக நியாயமாக அட்மிஷன் செய்வோம் என்று வசூல்ராஜாக்கள் சங்கம் கூறியது. வியாபாரிகள் தனித்தேர்வு வைத்தாலும் கவுன்சிலிங் வைத்து (capitation fee இல்லாமல்) அட்மிஷன் செய்யவேண்டும் என்று ஒரு வழக்கு போட்டனர். அது முடியாது (அப்புறம் இந்த வருட பிஸினஸ் பாழாய் போய்விடுமே) என்று வியாபாரிகள் வாதாடிக்கொண்டு இருக்கின்றனர்.
வினாத்தாள் குழப்பம் செய்த அண்ணா பல்கலைகழகத்தை குறை சொல்வதா, தீர்ப்பு வழங்குவதில் மெத்தனம் காட்டும் நீதிமன்றத்தை குறை சொல்வதா, நம் கல்லூரி வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும் விரிவாக்க வேண்டும் என்ற strategyயினை வைத்திருக்கும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தை குறை கூறுவதா. ஒரு மண்ணும் தெரியலை.
கேஸப்ளாங்கா
நான், இந்த வாரம் ஒரு நல்ல ஆங்கிலப் படத்தினை கண்டேன். படம் கேஸப்ளாங்கா (Casablanca). இதுவரை வந்த ஆங்கிலப் படங்களில் உள்ள சிறந்த வசனங்கள், என்ற ஒரு ஃபார்வார்ட் அஞ்சலில் தான் கேஸப்ளாங்காவினைப் பற்றி அறிந்திருந்தேன். பாலாஜி (பி.பி) வலைப்பூவில் அதைப் பற்றி எழுதியதைப் பார்த்து இன்னும் ஆர்வம் அதிகரித்தது. பிறகு இணையத்தில் மேய்ந்ததில், பல தகவல்கள் கிடைத்தன. இதைப் பற்றி எங்கோ “Best love story ever made on the big screen” என்று படித்ததாகவும் ஒரு ஞாபகம்.
1942ல் வெளிவந்தபடம் என்பதால், “கண்ணே உன்னைக்காண நான் ஓடோடி வந்தேன். உந்தன் மலர்விழி பார்வை என் மேல் விழாதா”, என்று நாடகத்தன்மையுடன் கொஞ்சம் exaggeration ஆக இருக்கும், என நினைத்தேன். ஆனால் அந்த திரைப்படமோ மிக யதார்த்தமாகவும், அழகாகவும், முக்கியமாக நல்ல நகைச்சுவையோடும், இத்தனை நாள் இதைப்பற்றி அறியாத என் சினிமா அறிவை எள்ளிநகையாட வைத்தது.
ரிச்சர்ட் (ஹம்ஃப்ரி போகர்ட்) என்கிற , கொள்கை பிடிப்புள்ள (போராளியும் கூட) , மனிதன் பாரிஸில் இல்ஸா (இங்க்ரிட் பெர்க்மன்) என்ற பெண்ணிடம் காதல் வயப்படுகிறான். இரண்டாம் உலகப்போரில் பாரிஸ், நாஜியின் பிடிக்குள் வருகிறது. அங்கிருந்து தப்பிக்க இருவரும் முடிவுசெய்கின்றனர். பாரிஸில் இருந்து தப்பித்து வேறு நாட்டிற்கு ரயிலில் பயணம் செய்ய முடிவுசெய்கின்றனர். ரிச்சர்ட் ரயில் நிலையத்தில் அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறான், ஆனால் அவள் வரவில்லை. மிகுந்த ஏமாற்றத்துடன் அவனும், அவனுடைய நண்பன் சாம், இருவரும் பாரிஸிலிருந்து தப்பித்து செல்கின்றனர். பின்னர் மொரொக்கோவில் உள்ள கேஸப்ளாங்காவில் ஒரு கஃபே ஒன்றினை நடத்திக் கொண்டிருக்கிறான். ரொம்ப நாள் கழித்து , தன்னுடைய கஃபேயில் தற்செயலாக இல்ஸாவினை சந்திக்கிறான். இல்ஸா, தன்னுடைய போராளி கணவன் விக்டருடன், ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறாள். ரிச்சர்டுக்கு இல்ஸாவின் மீது கடும்கோபம், ஆனால் இல்ஸா இன்னமும் ரிச்சர்டினை காதலிப்பதாக சொல்கிறாள். மேலும் ரிச்சர்ட் அங்கு இருப்பது தெரிந்தால், கண்டிப்பாக வந்திருக்க மாட்டேன் என்றும் சொல்கிறாள். இறுதியில் ரிச்சர்ட், இல்ஸா, விக்டர், எப்படி சிக்கலில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதுதான் கதை.
படத்தில் மிகவும் பிடித்தது ரிச்சர்ட் மற்றும் இல்ஸாவின் நடிப்பு. கொஞ்சமும் மிகைப்படுத்தாமல், இப்போது உள்ள நடிகர்களின் யதார்த்தமான நடிப்பினை போல மிகவும் இயல்பாக இருந்தது. இப்படத்தின் ஒளி அமைப்பும், படமாக்கியவிதமும் அருமை. வசனங்கள் கேட்கவே வேண்டாம். நகைச்சுவை மட்டுமல்லாமல் காதல் மற்றும் ஏனைய காட்சிகளிலும், மிக இயல்பாகவும் இருந்தது.
” Kiss me as if it were the last time ” என்று சொல்வதற்கு முன்னால் பெர்க்மன் காட்டும் முகபாவங்கள். காதலன் பாரிஸை விட்டு போகின்றான். ஆனால் தான் இறந்துவிட்டதாக கருதிய, தன் கணவன், குற்றுயிராக ஊர் எல்லையில் துடித்துக்கொண்டிருப்பதாக செய்தி வருகிறது. இதை நினைக்கும் போது வந்த கண்ணீரை, போகர்ட் பார்த்தவுடன் அவருடைய தோளில் முகம் புதைத்துகொண்டு சமாளிப்பார்.
“Play it once, Sam, for old times’ sake” என்று பெர்க்மன் கூறுவார். சாம் பியானோ வாசிக்கும் போது பெர்க்மேன் அதை முதலில் புன்னகையுடன் பார்ப்பார். இரண்டு அல்லது மூன்று நொடிகளில், அவருடைய பழைய காதல் நினைவுகள் வந்ததும் கண்ணில் நீர் கொஞ்சமாக பனிக்கும். போகர்ட் அங்கே வந்து “சாம், இதை வாசிக்காதேன்னு எவ்ளோ தடவை சொல்லிருக்கேன்” என்று கோபமாக சொல்வார். சாம், பெர்க்மன் இருப்பதை ஜாடையால் காட்டுவார். பெர்க்மனை பார்த்ததும் போகர்ட் திக் என்று நிற்பார். அப்போது போகர்ட்டின் நடிப்பு அருமை. கேமராவும், லைட் எஃபெக்கடும் சூப்பர். பெர்க்மன் , சான்ஸே இல்லை. கொள்ளை அழகு. மிகவும் எளிமையான, பாந்தமான முகம், இவருக்காகவே போன வாரம் இருமுறை இந்த திரைப்படத்தினை பார்த்தேன். இதை இன்னும் அழகாக பிபி இங்கே சொல்லியிருப்பார். (இவர் 20ஆம் நூற்றாண்டின் அழகான பெண்கள் பட்டியலில் இடம் பெறவில்லையாம். என்ன விளையாட்டு !!!!)
“I stick my neck out for nobody” என்று நாமும் சொல்ல நினைக்கின்ற வசனத்தினை ஒரு இறுகிய முகபாவத்துடனும், “Here’s looking at you, kid” என்று ஒரு தீவிர காதலனாக , ஒரு லயத்துடன் சொல்லும் போகர்ட் simply superb.
ஜெர்மன் மேஜர் இறந்தவுடன், “Round up the usual suspects” என்றும், “It’s a little game we play. They put it on the bill. I tear up the bill. It is very convenient” சொல்லும் ஃப்ரெஞ்ச் கேப்டன் கிச்சுகிச்சு மூட்டுகின்றார்.
அமெரிக்கா செல்ல நினைக்கும் இரு வயதான இத்தாலிய தம்பதிகள், அங்கே சுளுவாக இருக்கும் என்பதால் ஆங்கிலம் கற்றுகொள்கின்றனர். அமெரிக்காவுக்கான விசா (எக்ஸிட் பாஸ்) கிடைத்ததும், ரிச்சர்டின் கஃபேயில் உள்ள கார்லிடம் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த இத்தாலிய கணவன், தன் மனைவியிடம் ஆங்கிலத்தில் மணி என்ன என்று கேட்கிறான்.அதற்கு கணவன், “How watch ?” என்கிறான். மனைவியோ, “Oh..ten watch” என்கிறாள். கணவன் அதற்கு “That much” என்று பதிலளிக்கிறார். கார்ல் நக்கலாக , “நீங்க அமெரிக்காவுல பொழச்சுப்பீங்க” என்று சொல்லிவிட்டு என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார். இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த படத்தினை அனைவரும் மிகச்சிறந்த காதல் திரைப்படம் என்று பில்டப் கொடுத்தனர். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை, ஒரு வேளை அந்த romance quotient எனக்கு சைபர் என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம். காதலைக் கொச்சைப் படுத்தாமல், கதாபாத்திரத்துக்காக கதையினை சமரசம் செய்யாமல், கருப்பு வெள்ளையில் ஒரு கவிதையினைப் போல திரைக்கதையினை சொல்லியதும், இயல்பு பிறழாமல் (நகைச்)சுவையாகவும் சொல்லியதால் இந்தப் படம் என் மனதில் நீண்ட நாட்கள் தேங்கியிருக்கும். இங்க்ரிட் பெர்க்மனின் அழகுக்காகவும், ஹம்ஃப்ரி போகர்ட்டின் dialogue delivery க்காகவும் இப்படத்தினை இன்னும் இருமுறைகூட பார்க்கலாம்.
‘மிர்ச்சி’ சுசித்ராவும் எருமையும்
இன்று காலையில் நம்ம ரேடியோ மிர்ச்சியில், சுசித்ரா இந்திய சமுதாயத்திற்கு சேவை செய்யும் விதமாக நேயர்களிடம் ஒரு கேள்வி கேட்டார். (அங்கங்கே ஒருமாதிரி இழுத்துக்கொண்டும், சத்தமாகவும், மிதமிஞ்சிய சந்தோஷத்துடன், கொஞ்சம் சரளமாகவும் படிக்கவும்…சுருக்கமாக சொன்னால் ‘மிர்ச்சி சுச்சியினைப்’ போல் படிக்கவும்)
“நம்ம லல்லு பிரசாத் யாதவ், ரயில்வே மினிஸ்டர் ஆனாதக்ப்ப்பறம் பல அதிரடி திட்டம் செஞ்சிருக்காருங்க. அதுல்ல்ல்ல்லே ஒன்னுதான், ரயில்வே ஸ்டேஷன்லயும், ட்ரேய்ன்லயும் மண் கப் ல டீ, காபி சேர்வ் பண்ற திட்டம்ங்க. வருங்காலத்துல டிரேயின்ல பில்லோ கவரும், பெட்ஷீட்டும் காதி மெட்டீரியல் செஞ்சதுதான் யூஸ் பண்ணபோறாங்களாம். நீநீநீங்ங்ங்க நம்ம லல்லுவுக்கு இதைப்போல ஒரு யோசனை சொல்லும்னா, என்ன சொல்லுவிங்கே…. நீங்க டிபன் சாப்பிடாட்டாலும் பரவாயில்லை, ஷேவ் பண்ணாட்டாலும் பரவாயில்லை, எந்த முக்கியமான வேலையினயும் செய்யாம, உங்க பதிலை எனக்கு 55509990 நம்பருக்கு போன் பண்ணிசொல்லுங்க.உங்க பதில் மிர்ச்சியா இருந்தா ஒரு மிர்ச்சி காபி மக் உண்டுங்ங்ங்ங்க !!!” என்று சுப்ரபாதம் படித்துக்கொண்டிருந்தார். (நானும் என் தம்பியும் இதை முக்கியமாக கேட்டுக்கொண்டிருந்தோம்).
சரி, என் தம்பி அந்த மிர்ச்சி காபி மக் வேண்டும் என்று ரொம்பநாள் தொலைபேச முயன்று சோர்ந்திருந்தான். நான் அவனிடம் பந்தையம் வைத்துவிட்டு பதில் சொல்லலாம் என்று டயல் செய்தேன். முதல் தடவையே கிடைத்தது. நான் , ” பிளாஸ்டிக் பொருளினால் செய்த கோப்பைகளால் மாசுபாடு அதிகரிக்கிறது, அதனால் மண் பாண்டம் உபயோகிப்பது நல்லது. அதேபோல டீசல் இஞ்சினால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகிறது ஆகையால் டிரேயினை இழுப்பதற்கு ஐந்து எருமைகளும், தள்ளுவதற்கு ஐந்து காளைகளும் உபயோகிக்கலாம். மாசுக்கட்டுப்பாடு பிரச்சனை ஒழியும், அப்படியே வந்தாலும் உரமாகவும் உபயோகித்துக்கொள்ளலாம். என்ன புகைவண்டிக்குள்ளே உள்ளே ஒரு 400-500 எருமைகள் இருக்கும். நம்ம ஓட்டுநர் மற்றும் தள்ளுனர் எருமை கொஞ்சம் அஜீஸ் பண்ணிக்கனும்” என்று சொல்லாம் என்று எண்ணியிருந்தேன். மறுமுனையில் ஃபோன் எடுத்தவர், என் தொலைபேசி எண் வாங்கிக்கொண்டு , “சுசித்ரா உங்களைக் கூப்பிட்டாலும் கூப்பிடுவார்” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். காபி மக்…டமால்.
எஸ்.ராமகிருஷ்ணன் - துணையெழுத்து
செல்லப் பிராணிகளை வளர்ப்பது, அதை ஜுஜ்ஜு என்று கொஞ்சுவது என்று எதையும் விரும்பாதவன் நான். குறிப்பாக பிரபலங்கள், ஊடகங்களில் வந்து, “என் வீட்லே, 5 பூனை , 2 டாபர்மேன் , 1 மாருதி (காரா , குரங்கா ?) வச்சிருக்கேன். எல்லாரும் ஒரு செல்லப்பிராணியாவது (புருஷனைத்தவிர) வளர்க்கனும். அதுகளுக்கு யார் அன்புகாட்டுவா ?.” என்று மேனகா காந்தி ஸ்டைலில் பேசுவதைக் கண்டால் எரிச்சல் தான் வரும். அதில் குறிப்பாக மேனகா, தூர்தர்ஷனின் ஒரு தொடரில் (விலங்குகளைப் பற்றி ஒரு விழிப்புணர்வு தொடர்) , சீன் விடுவதைப்பார்த்தால் பற்றிக்கொண்டு வரும். 20 நிமிடம் விலங்குகளைப்பற்றி பல நல்ல தகவல்களை சொல்லிவிட்டு, கடைசி பத்து நிமிடம் நேயர்களிடம் இருந்து வந்த கடிதங்களைப் படிப்பார். அதைப் படிக்கும் போது , அந்த நேயர் காப்பாற்றிய பிரணியின் முந்தைய நிலைப்பற்றி ஒரு முதலைக் கண்ணீர் விட்டுவிட்டு, பின்னர் அவருடைய செயலினை சிலாகித்துப்பேசுவார். மிகவும் போலித்தனமாக இருக்கும். அவர் மீது இருந்த வெறுப்பினாலேயே, என் தம்பி வீட்டில் நாய்க்குட்டி வளர்க்க வேண்டும் என்ற போது, அது நடுவீட்டிலே அசிங்கம் பண்ணிடும், அப்புறம் நீதான் அதை சுத்தம் செய்யவேண்டும் என்று கூறி முன்னொரு காலத்தில் ப்ரேய்ன் வாஷ் செய்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு மாதமாக என்னிடத்திலே ஒரு சிறு மாற்றம். விகடன் துணையெழுத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய இந்த கட்டுரையினை படித்த பிறகு எஸ்.ராமகிருஷ்ணன், தன் நண்பர் ஒருவரைப்பற்றியும் , அணில்களைப்பற்றியும், மிக நுட்பமாக, தனக்கே உரிய கூறுமுறையில் எழுதியிருந்தார். மிகவும் ரசித்த கட்டுரை (விவரணை ??) அது. (Updates : ஆனந்த விகடன் தளத்தில் இருந்து அந்த கட்டுரைக்கு சுட்டி கொடுக்க முயன்றேன் முடியவில்லை. மறுபடியும் முயற்சி செய்து பார்க்கிறேன்) .
எங்கள் வீட்டில் அழையாவிருந்தாளியாக ஒரு பூனை 2 வாரங்களுக்கு முன் வந்தது. இரவு சுமார் ஒன்பது மணி அளவிற்கு எங்கள் வீட்டு ஜன்னலில் வந்து அமர்ந்து மிக உரிமையோடு மியாவியது (!!!). என் தம்பிக்கு ஒரே குஷி, அதை தடவிக்கொடுத்துவிட்டு , வீட்டில் இருந்து எவர்சில்வர் கிண்ணத்தில் பால் கொண்டுவந்து வைத்தான். தலைவரும் நக்கி நக்கி உறிஞ்சி விட்டு ஒடிப்போயிட்டார். மறுகாலை பேப்பர் எடுப்பதற்காக கதவைத்திறந்தால் தலைவர், எங்கள் வீட்டு கால்மிதியில் ஜம்மென்று அனந்த சயனித்திருக்கிறார். தலையினை குப்புறமாக தொங்கப்போட்டுக் கொண்டு ஹாயாக படுத்திருந்தார். அதைப்பார்த்ததும், அருவருப்போ கோபமோ வரவில்லை, மாறாக சிரிப்புதான் வந்தது. பேப்பர் எடுத்துக்கொண்டு முன்னாலிருக்கும் இரும்புக் கதவினை சாத்தும் சத்ததில் தலைவர் எழுந்துகொண்டார். நானோ “ச்சூ ! போ.. போ” என்று கூற, ஒரு விநாடி என்னை பார்த்துவிட்டு, சோம்பேறித்தனத்துடன் மறுபடியும் சயனம். ச்சே பூனை கூட நம்மை மதிக்கமாட்டேங்குது, நம்மைப் பார்த்து பயப்படமாட்டேங்குதே என்று நொந்து கொண்டு உள்ளே சென்றேன். என் தம்பியிடம் சொன்னேன், ஆர்வமாக கிண்ணித்தில் பாலுடன், மியாவாத்மாவின் திருப்பள்ளியெழுச்சிக்கு சென்றான்.
இப்போது தலிவர், எங்க வீட்டில் உள்ள அனைவருக்கும் ஜிகிடி தோஸ்தாயிட்டார். என் அம்மாவோ, ” என்னடி (அது டியா..டாவான்னும் எனக்கு தெரியலே) .. என்ன வேணும்..உனக்கு பால் வேணுமா.. உள்ள வந்தே உதைவிழும்” என்ற ரேஞ்சுக்கு கொஞ்ச (பொம்பளைங்கல்லாம் இப்படித்தான் கொஞ்சுவாங்களா?? ) ஆரம்பித்துவிட்டார். என் தம்பியோ நான் விரும்பித்திண்ணும் ப்ரிட்டானியா டைகர் பிஸ்கட்டினை அதுக்கு போட ஆரம்பித்து விட்டான். என் தந்தை அலுவலகத்திற்கு தயாராகி வெளியே சென்று நிற்பார், உடனே நம்ம தலைவர், அப்பாவின் கால்கள் நடுவிலே சென்று தன் முதுகினை மெதுவாக தேய்த்துக்கொள்வார். என் அப்பாவும் அது தேய்க்கும் வரை நின்று விட்டு பிறகு செல்வார். நம்மகிட்ட தான் தலைவர் கொஞ்ச டிஸ்டன்ஸ் மெய்ண்டேய்ன் செய்கிறார். பரவாயில்லை. நானோ எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையினைப் படித்துவிட்டு, எனக்குள் இருந்த அந்த வெறுப்பு எங்கே போனது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
பையில காசு கையில வேலை
என் உறவினன், அண்ணாமலை பல்கலைகழகத்தில் கணிப்பொறியியல் படித்துவிட்டு, வேலைதேடும் படலத்திற்காக சென்னை வந்துள்ளான். என்னிடம் வந்து “இங்க பார், நான் ரொம்ப பிராக்டிகல். நிறைய பணம் செலவுபண்ணி B.E முடிச்சிருக்கேன்”. “எனக்கு இந்த Job Satisfaction, மனசுக்குப்பிடிச்ச வேலை மண்ணாங்கட்டியில்லாம் நம்பிக்கையில்லை. எனக்குத் தேவை காசு. அவ்ளோதான். அதுக்கு ஒரு வழிய சொல்லு”, என்று ஒரு போடுபோட்டான். அனைத்தையும் ஜீரணித்துக்கொண்டு, தற்போது Job Marketன் பொன்முட்டையிடும் வாத்தான Mainframe கோர்ஸினை பரிந்துரைத்தேன்.
அவனும் சென்னையிலுள்ள பிரபலமான mainframe training center அனைத்திற்கும் சென்று விசாரித்துவந்து எனக்கு ஒரு Field Report கொடுத்தான். அவனுக்கு நல்ல பிசினஸ் மூளை, ஊரில் (அரியலூர்) அவன் தந்தை மளிகை வியாபாரம் செய்பவ்ர். இவனுக்கும் நேக்காக பேசி, விஷயத்தை கறக்கும் திறமை உண்டு. இவன் சொன்ன விஷயம் தான் அதிர்ச்சிக்குரியதாக இருந்தது. நாம் இப்போது பெருமைப்பட்டுக் கொண்டுருக்கும் தகவல் தொழிநுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில் (IT Services companies like Infosys, TCS, CTS, Wipro, etc) இருக்கும் அவலநிலை தெரிந்தது.
பொதுவாக Mainframe கணிணி சம்பந்தவேலை என்பது ஒரு வற்றாநதி போன்றது, என்று அனைவருக்கும் ஒரு நம்பிக்கை. கோடிக்கணக்கில் டாலரில் முதலீடு செய்து, முப்பது, முப்பத்தைந்து வருடங்கள் முன் செய்த மென்கலன்களை டிஜிடல் புரட்சி, வளர்ச்சி, என்ற பெயரில் குப்பையில் கொட்டிவிட்டு, மைக்ரோசாஃப்ட், சன், ஆரக்கிள் போன்ற நிறுவனங்கள் தரும் மென்கலனுக்கு மாற துட்டு செலவு செய்ய முடியாமல் இருக்கும் நிறுவனங்கள் , நம் இந்திய சேவை நிறுவனங்களின் காமதேனுக்கள். “உங்கள் பழைய மென்கலங்களினால் புதிய தொழிநுட்பத்திற்கு ஈடு கொடுக்க முடியாது, அதை புதியதாக மாற்றித்தருகிறோம் (Development/Transition)” என்றும், அந்நிறுவனங்கள் வேண்டாம் என்று கூறினால் , “உங்கள் பழைய மென்கலங்களில் உள்ள ஓட்டையினை சரி செய்து தருகிறோம்(Maintenance)” என்று கூறியே பல நிறுவனங்கள் ( இந்திய நிறுவனம் மட்டும் அல்ல EDS , Accenture போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் கூட) பிழைப்பை நடத்துகின்றன.
இந்த சேவை நிறுவனங்கள் புதிதாக வேலை/கஸ்டமர் பிடிப்பதற்கு, தங்களிடம் உள்ள பணியாளரின் எண்ணிக்கை (Resource Count) என்பது(ம்) ஒரு முக்கிய அம்சம். பல பெரிய நிறுவனங்கள் (Ford, GM, Wal-Mart, போன்றவை) தங்களின் பணியினை செய்யும் நிறுவனத்தில், தங்களின் சேவையினை செவ்வனே செய்வதற்கு போதுமான ஆட்கள் உள்ளனரா என்பதையும் ஒரு selection criteria வாக கொள்வார்கள். அதனால்தான் அடிக்கடி, இந்த நிறுவனத்திற்கு இவ்வளவு ஆட்கள் தேவை , சீக்கிரமாக தொடர்பு கொள்ளவும் போன்ற செய்திகள் அடிபடுகின்றன.
சேவை நிறுவனம், தன் மனித வளத்துறையினை (HR) அணுகி , எனக்கு இந்த பணிக்கு, இந்த தேதிக்குள், இவ்வளவு அனுபவம் மிக்க ஆட்கள் தேவை என்று கூறும். மனித வளத்துறை, பல கன்சல்டன்சிகளையும், இணையத்தில் மேய்ந்து , ஆட்களை பிடிக்கும் அல்லது பிடிக்கப்பார்க்கும். Mainframe என்பது அரதபழசான கணிணி என்பதால், புதிதாக கல்லூரியில் இருந்துவரும் மக்களிடம் , இதைப்பற்றிய அறிவு மிகவும் குறைச்சல். ஆகையால் சேவை நிறுவனங்களின் Mainframe சம்பந்தப்பட்ட , கீழ்நிலை வேலையினை செய்வதற்கு ஆட்கள் கம்மி. இந்த Mainframe training center இல் பயிற்சி எடுக்கும் மாணவர்களுக்கு, சேவை நிறுவனங்களில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம் அதிகம்.
இங்குதான் பிரச்சனையே ஆரம்பம். (ஆகா அப்ப இவ்ளோ நேரம் சொன்னது என்ன ? … அது, வந்து , ஹி..ஹி). அனைத்து பயிற்சி நிறுவனங்களும் 18,000 முதல் 35,000 வரை வாங்குகின்றன. இதில் ஒரு நிறுவனத்தில் (பெயர் சொல்லலாமா என்று தெரியவில்லை) , “இங்க பாருங்க..18 ரூவா கட்டினீங்கனா..டிரெயினிங் தருவோம்..அதுக்கு மேல வேலை வேண்டும்னா..75 கொடுக்கனும்.” . மெனு கார்டு போல், ஒரு லிஸ்ட் கொடுத்து (எல்லாம் உண்மையாகவே ரேஞ்சான கம்பெனி ) , “இதுல இருக்கிற, எந்த கம்பெனில வேணும்னு சொல்லுங்க , நாங்க ஏற்பாடு பண்றோம்.. ஆனா ஒரு கன்டிஷன், எங்க இன்ஸ்டிடியுட்லதான் டிரெயினிங் எடுக்கணும்”.
இரண்டு அல்லது மூன்று வருடம் வேலை தேடி, கிடைக்காத ஆட்களுக்கு இவர்கள்தான் ஆபத்பாந்தவர்கள். இரண்டு மாதம் டிரெயினிங் கொடுத்துவிட்டு, ஒரு போலி அனுபவ சான்றிதழை (இது கொஞ்சம் சீப், ரூ.2000 போதும். பிரபலமான நிறுவனத்தின் அனுபவ சான்றிதழ் என்றால் கொஞ்சம் அதிகம்) சேவை நிறுவனத்தின் மனித வளத்துறைக்கு கொடுத்துவிட்டு, கூடவே கொஞ்சம் வெட்டிவிட்டு, நிறுவனத்திற்குள் நுழைந்துவிடுகின்றனர்.அப்புறம் என்ன , புது காரு, புது வீடு என்று கலக்கல்தான் (நிறுவன முதலாளிகளுக்கு வயிற்றில் கலக்கல்).
இது போன்ற சமாச்சரங்களில் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று , இந்த நிறுவனங்கள் தங்களுடைய brand image/value வை பொத்திப் பொத்தி வளர்க்கின்றன. இதற்கு எதேனும் பங்கம் வந்தால் அவ்வளவுதான், டங்கு டணால் ஆகிடும். Economic Times, Business Line அல்லது Financial Express போன்ற பத்திரிக்கைகள் எதாவது ஒரு Sting (ஆகா… இதற்கு தமிழ்ல என்னனு தெரியலயே) மூலம் வெளிக்கொண்டு வந்தால்தான் இதற்கு ஒரு விடுவுகாலம் பிறக்கும். கூடிய சீக்கிரம் அது நடக்கும் என்று நம்புவோம்.